பாதாள உலக கும்பல் தலைவரின் முக்கிய உதவியாளர் போதைப்பொருளுடன் கைது

12 0

துபாயில் உள்ள பாதாள உலக கும்பல் தலைவரின் முக்கிய உதவியாளர் ஒருவர் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டியம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 200 மில்லி கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பல்வேறு பிரதேசங்களிலிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் ஹொரணை பிரதேசத்தில் கடந்த மே மாதம் 05 ஆம் திகதி நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை மற்றும் ஆண்டியம்பல பிரதேசத்தில் கடந்த 05 ஆம் திகதி கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

பின்னர், சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 02 மோட்டார் சைக்கிள்கள், 15 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் வாள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் இன்று (18) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.