கொழும்பில் வீடொன்றுக்குள் நுழைந்து பெருந்தொகை பணத்தைத் திருடிய 4 பொலிஸாருக்கு விளக்கமறியல்

13 0

கொழும்பு, முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை நாளை வியாழக்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் நால்வரும் இன்று (18) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புளுமெண்டால் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி 1.4 மில்லியன் ரூபா பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸாரால் இன்று (18) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.