தோற்பவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வெற்றியைக் கொண்டாடுங்கள் – டலஸ் அழகப்பெரும !

17 0

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகியுள்ளது. எனவே இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தோல்வியடையும் ஏனைய வேட்பாளர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வெற்றியைக் கொண்டாடுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று  செவ்வாய்கிழமை (17)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சஜித் பிரேமதாச 21ஆம் திகதி இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அந்த வெற்றியை ஆதரவாளர்கள் அமைதியாகக் கொண்டாட வேண்டும். தோல்வியடையும் வேட்பாளர்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.

சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கும் எந்தவொரு வாக்காளரும் ஒழுக்கமின்றி செயற்படக் கூடாது. ஒழுக்கமான நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.

எதிர்தரப்பினர் எம்மை விமர்சித்தாலும், நாம் அவற்றுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்று சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் எந்தவொரு தோல்வியடைந்த வேட்பாளரும் இவ்வாறு செய்ததில்லை. எனவே அவரைப் போன்றே அவரது ஆதரவாளர்களும் ஒழுக்கத்துடனும் நாகரீகமாகவும் செயற்பட வேண்டும் என்றார்.