மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் நாட்டு பற்று இருக்குமாயின் நாமல் ராஜபக்ஷவுக்கு அறிவுரை வழங்க வேண்டும்

16 0

மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் நாட்டு பற்று இருக்குமாயின் நாமல் ராஜபக்ஷவுக்கு அறிவுரை வழங்க வேண்டும். நாமல் ராஜபக்ஷ போட்டியில் இருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என தொடம்பஹால ராஹூல தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தலதா மாளிகை இருந்தால் மாத்திரமே பௌத்த சாசனத்தை பாதுகாக்க முடியும். தலதா மாளிகையின் இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு எம்மால் கைகளை கட்டிக் கொண்டு இருக்க முடியாது.

ஒரு சில ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கை பிரகடனம் பௌத்த சாசனத்துக்கு எதிராக உள்ளது. தேசிய கொடியையும், பௌத்த கொடியையும் மாற்றியமைப்பதாக குறிப்பிடுகிறார்கள். இவ்வாறான நிலை  ஏற்பட்டால் பௌத்த சாசனம் இல்லாதொழியும்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. நாட்டு மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார் என்பதை  ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மையில் சேவையாற்றியிருந்தால் அவர் தனது மகனான நாமல் ராஜபக்ஷவுக்கு அறிவுரை  வழங்க  வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ போட்டியில் இருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் உள்ளது. எதிர்காலத்தில்  அவர் போட்டியிடுவதாக இருந்தால் நிச்சயம் ஆதரவு வழங்குவோம். இந்த முறை ஜனாதிபதித் தேர்தல் பொருளாதார காரணிகளை முன்னிலைப்படுத்தியதாக உள்ளது ஆகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும்.

2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக  தெரிவு செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதற்கு ஆதரவு வழங்கினோம்.ஆகவே அந்த தீர்மானத்தை தொடர்ந்து செயற்படுத்தூறு கேட்கிறோம் என்றார்.