பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன விவகாரத்தை இனவாத ரீதியாக அணுகவில்லை

16 0

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன விவகாரத்தை நான் இனவாத ரீதியாக அணுகவில்லை. மாறாக அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் தெளிவின்மை காரணமாகவே நீதிமன்றத்தை நாடியதாக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உதவி ஆசிரியர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதோடு, கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி போட்டிப்பரீட்சைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன.

எவ்வாறிருப்பினும் பரீட்சைகள் இடம்பெறவிருந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தாக்கல் செய்த மனுவுக்கமைய, நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்தது. இதனால் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இவ்விடயத்தில் தான் தலையிட்டு மனுவை மீளப்பெறுமாறு பைசர் முஸ்தபாவிடம் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே நேற்று செவ்வாய்கிழமை பம்பலப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பைசர் முஸ்தபாவிடம் வினவிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் எவ்வித இனவாதமும் இல்லை. வர்த்தமானி அறிவித்தலில் பெருந்தோட்டப் பகுதிகள் எவை என்பது குறிப்பிடப்படவில்லை. பெருந்தோட்டப் பாடசாலைகள் எவை என்றும் குறிப்பிடப்படவில்லை. அதில் நியாயமில்லை என்பதற்காகவே நீதிமன்றத்தை நாடியிருக்கின்றோம்.

பெருந்தோட்டப் பாடசாலைகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், பாடசாலைகளின் பட்டியல் அதில் உள்ளடக்கப்படவில்லை. பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ள போதிலும், பெருந்தோட்டப் பகுதிகள் எவை என அடையாளப்படுத்தவில்லை.

வர்த்தமானியில் இவ்வாhறான குறைபாடுகள் காணப்படுவதன் காரணமாகவே பிரச்சினைகள் எழுந்துள்ளன. எனவே இது தொடர்பில் கலந்துரையாடி தீர்வு காண முடியும் என பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.