நாளையதினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

12 0

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து நாளை புதன்கிழமை (18) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளைய தினம் காலை 8.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதனால் வைத்திய சிகிச்சை அளிப்பதில் இடையூறு ஏற்படலாம் என  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர்  கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண இணைப்பாளரும், உதவி செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிராக சுகாதார அமைச்சு முன்னெடுக்கும்  ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மீள் பரீசிலணை செய்வதற்கு சுகாதார அமைச்சுக்கு 14 நாள் கால அவகாசத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வழங்கும்.

அதற்கு சாதாகமான பதில் கிடைக்காவிடின் மாத இறுதியில் நடைபெறும் மத்திய குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.