நானுஓயாவில் சொகுசு கார் விபத்து : சாரதி காயம்

12 0

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயா – வெண்டிகோனர் பகுதியில் இன்று திங்கட்கிழமை (16) பிற்பகல் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து அதிசொகுசு காரொன்று வீதியோரத்தில் உள்ள கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான அதிசொகுசு காரே விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த சொகுசு கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு கற்பாறையில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின்போது 34 வயதுடைய காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அல்லது சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.