தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு ; காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

16 0

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் படோவிட்ட நான்காம் பிரிவில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை  என்பதுடன், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக  விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.