கடந்த இருபத்தைந்து வருடங்களாக 11 மில்லியன் கடவுச்சீட்டுகள் ஒரே நிறுவனத்தினால் 5.89 டொலர்களுக்கு எவ்வித டெண்டரும் இன்றி அச்சிடப்பட்டுள்ளதாகவும், அதற்கும் குறைவான விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்பதாலேயே இம்முறை டெண்டர் கோரப்பட்டதாகவும் அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். மேலும் 5.06 டொலர்களுக்கு இ-பாஸ்போர்ட் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு நேற்று புதன்கிழமை (11) சென்ற அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய,அமைச்சர்.
கடவுச்சீட்டு , விசா விவகாரம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசியல் ஆதாயம் அடைய காரணமாக அமைந்தது. சஜித் பிரேமதாச, தான் ஆட்சிக்கு வந்ததும் அதில் தொடர்புடையவர்களை தண்டிப்பேன் என்கிறார். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதை நாங்களும் விரும்புகிறோம்.
ஆனால் உண்மை தெரியாமல் பேசுகிறார். கடவுச்சீட்டு பெறுவதற்கு தரகர் மாஃபியா 50,000 ரூபாய் முதல் பல்வேறு தொகைகளை வசூலித்ததாக அறிந்தோம்.
ஆனால் தற்போது அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடிவரவு அலுவலகம் அருகிலும் ஒரு சிறப்பு பொலிஸார் குழு பணியில் உள்ளது.
இப்போது வரிசைகள் இல்லை. இருபத்து இரண்டு வருடங்களாக ஒரே நிறுவனத்தால் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டது. குறைந்தபட்சம் டெண்டர் கூட கோரப்படவில்லை. அவர்கள் இதுவரை 11 மில்லியன் பாஸ்போர்ட்டுகளை அச்சிட்டுள்ளனர்.
இம்முறை அதே நபர்களிடம் கொடுக்கச் சென்றபோது அதை நிறுத்திவிட்டு டெண்டர் கோரச் சொன்னேன். புதிய கடவுச்சீட்டு கிடைக்கும் வரை சில தட்டுப்பாடு உள்ளது. கிடைப்பதை நிர்வகித்தல் வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வெளிநாடு செல்வதற்கு எனக்கு விசா பெற வேண்டிய அவசியம் இல்லை. உலகின் எந்த நாட்டிலும் 10 ஆண்டுகள் வாழ எனக்கு சிறப்பு விசா உள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் தொடர்புடைய 80 அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கான வீசாவைப் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் தவறான கூற்று என்று நான் நினைக்கிறேன்.
தேர்தல் காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். எந்த அமைச்சர்களுக்கும் விசா கிடைத்ததா என்று தெரியவில்லை. ஆனால் நான் அப்படி விசா எடுக்கவில்லை. அப்படி யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார். இதில் சந்தேகமில்லை. அரசாங்க அமைச்சர்களாகிய நாம் அரசாங்கத்தின் தலைவருக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இந்த நாடு தற்போது ஓரளவு மீண்டுள்ளது. நாட்டை முழுமையாகக் கட்டியெழுப்ப தற்போதைய ஜனாதிபதிக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இது பரிசோதனைக்கான நேரம் அல்ல. நீங்கள் உங்கள் மனதினால் சிந்திப்பதைவிட்டும் மூளையால் சிந்தித்து செயல்பட வேண்டும்
இதுவரை நீதியின் செயல்பாடு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுள்ளது. போதைப்பொருள் பணம் பலரது கைகளில் சிக்கியுள்ளது.
அவர்கள் தான் பொலிஸ்மா அதிபரை சுற்றி வளைத்து அடிக்கிறார்கள். யுக்திய செயல்பாடுதான் அதற்குக் காரணம். இந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் யுக்திய செயற்பாடு இரட்டிப்பாக்கப்பட்டு கடுமையாக நடைமுறைப் படுத்தப்படும். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தல் 100% இல்லாவிட்டாலும் 90% கட்டுப்படுத்தப்படும் என்றார்.