ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றிக்கடனை செலுத்த மக்கள் தயாராக இருக்கின்றனர் – அகிலவிராஜ்

14 0

மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு மக்கள் நன்றி செலுத்தியதுபோல் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மக்களை பாதுகாத்த ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த தேர்தலில் நன்றிக்கடனை செலுத்த தயாராக இருக்கின்றனர். அதனால் ரணில் விக்ரமசிங்கிவின் வெற்றியில் எந்த சந்தேகமும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிலாஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரங்கள் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

பிரசாக்கூட்டங்களுக்கு மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும் சக்தியை கொடுத்துவருவதை காணக்கூடியதாக இருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ் இந்த நாட்டை யுத்தத்தில் இருந்து மீட்டபோது, அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் நாட்டு மக்கள் அவரை அமோகமாக வெற்றியடையச் செய்தனர்.

அதேபோன்று நாடு வங்குராேத்தடைந்து மக்கள் பொருளாதார ரீதியில் கஷ்டப்படும்போது நாட்டை பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க இரண்டு வருடங்களில் நாட்டை ஸ்திர நிலைக்கு கொண்டுவந்தார். அதற்கான நன்றிக்கடை செலுத்துவதற்கு மக்கள் தற்போது இந்த தேர்தலை எதிர்பார்த்து இருக்கின்றனர். அதனால் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியில் எந்த சந்தேகமும் இல்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு நூற்றுக்கு 3வீத வாக்குகளே கிடைத்தன. சஜித் பிரேமதாசவுக்கு 41வீத வாக்குகள் கிடைத்தன. ஆனால்  இந்த முறை சஜித் பிரேமதாசவுக்கு அந்தளவு தொகை வாக்கு கிடைப்பதற்கு சாத்தியமில்லை.

ஏனெனில் தமிழ் முஸ்லிம் வாக்குகள் இந்த முறை பிளவுபட்டு செல்கின்றன. அதேபோன்று சஜித் பிரேமதாசவுடன் அன்று இருந்தவர்கள் அனைவரும் தற்போது இல்லை. அதேநேரம் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய தேசிய கட்சின் வாக்குள் அவ்வாறே இருக்கும் நிலையில் 69 இலட்சம் வாக்குகளை பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் 90 வீதமானவர்கள் தற்போது ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கின்றனர்.

அதனால் தேர்தல் பிரசாரத்துக்கு மக்களை அதிகம் கொண்டுவந்து, தங்களுக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிப்பவர்கள் குறித்த மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.இந்த தேர்தல் புதிய ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்கி பரீட்சித்துப்பார்க்கும் தேர்தல் அல்ல. கடந்த ஜனாதிபதி தேர்தலில் புதிய ஒருவரை ஜனாதிபதியாக்கி பார்ப்போம் என எடுத்த தீர்மானத்தால், நாடு பாரியளவில் வீழ்ச்சியடைந்தது, அந்த தவறை மக்கள் மீண்டும் செய்யமாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

ரணில் விக்ரமசிங்க இதுவரை காலம் நாட்டின் பிரதமராகவே இருந்து வந்தார். அதனால் சில தீர்மானங்களை எடுப்பதற்கு அவரால் முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் கடந்த இரண்டு வருடங்கள் அவர் ஜனாதிபதியாக இருந்து செய்த பணிகள் மூலம் , அவரின் உண்மையான ஆளுமையை மக்களுக்கு கண்டுகொள்வதற்கு முடியுமாகி இருந்துள்ளது என்றார்.