மக்களின் துயரங்களை சந்தைப்படுத்தி ரணில் – அநுர இரகசிய கொடுக்கல் வாங்கல் மூலம் முன்னேற முயற்சி

17 0

பேரளவில் வெவ்வேறாக இருந்தாலும் பிரதிவாதிகள் இருவரும் திருட்டுத்தனமாக ஒன்றாக உள்ளனர். கட்சிகள் இரண்டாக இருந்தாலும் ரணில் விக்ரமசிங்கமும் அநுரகுமார திசாநாயக்கமும் ஒன்றாக இணைந்து இரகசிய கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றனர். இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தன்னுடைய வெற்றியை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

மாவத்தகம நகரில்  நேற்று திங்கட்கிழமை (09) ஆம் திகதி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 42 ஆவது வெற்றி பேரணியில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாச ஆகிய எனக்கு பொறுப்புக்கள் கிடைக்கப்பெற்றால் மக்களுடைய துன்பமும் வேதனையும் இல்லாது செய்யப்படும் என்பதால், மக்களின் துன்பத்தை சந்தைப்படுத்துகின்ற ரணிலும் அநுரவும் அதற்கு விருப்பமில்லை.

தற்பொழுது ரணில் அநுர கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஜனாதிபதியே அவரது வாயால் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி தோல்வி அடைவார் என்பதால் அநுரகுமாரவுக்கு வாக்களிக்குமாறு கூறியிருக்கிறார்.

அத்தோடு அநுரகுமார வடக்கிற்குச் சென்று தெற்கில் உள்ளவர்கள் அவருக்கு வாக்களிப்பதால் வடக்கிலும் கட்டாயம் வாக்களிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது வெறும் பகல் கனவாகும். முழு நாடும் முழு நாட்டையும் கவனிக்கின்ற, சாதாரண மக்களை கவனிக்கின்ற, பொதுமக்களுக்கு சேவை செய்கின்ற, கீழ்மட்ட மனிதர்களே பாதுகாக்கின்ற அரசாங்கம் ஒன்றிற்காக எல்லோரும் ஒன்றாக இணைந்திருக்கின்றார்கள்.

அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயல்படும் தாம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் மீண்டும் கம் உதாவ யுகத்தை உருவாக்கி காணியில்லாத, வீடு இல்லாத மக்களுக்கு அவற்றை பெற்றுக் கொடுப்போம்.

ரணில் அநுர இவற்றிற்கு விருப்பமில்லை. மக்கள் தொடர்ந்து துன்பத்தோடும் துயரத்தோடும் இருப்பதையே அவர்கள் விரும்புகின்றார்கள். எனவே இவற்றிற்கு ஏமாற வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன் .

அரசாங்கத்தால் முடியாமல் போன விவசாயிகளின் கடனை இரத்து செய்வோம். விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்காக 50 கிலோ கிராம் எடையுள்ள உர மூடை ஒன்றை 5000 ரூபாய்க்கு வழங்குவோம்.

விவசாய கடனையும் இரத்து செய்வோம். அரசாங்கத்தால் செல்வந்தர்களின் கோடிக்கணக்கான கடன்களையும் வட்டித் தொகையையும் இரத்துச் செய்ய முடியும் என்றால் விவசாயிகளின் விவசாய கடன்களையும் இரத்துச் செய்ய முடியும்.

நிவாரணத்திலே தங்கி இருக்கின்ற சமூகம் ஒன்றை கட்டியெழுப்பாது வறுமையை படிமுறையாக ஒழிப்பதற்கு வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தையும் முன்னெடுப்போம்.

மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாட்சியின் கடமைகளை நிறைவேற்றுவோம். 

மிகப்பெரிய செல்வந்தர்களைத் தவிர பெரும்பான்மையான மக்கள் அசெளவுகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். தொழில் வாய்ப்பின்மையால் வறுமை அதிகரித்து இருக்கின்றது.

தொழிற்சாலைகள் மூடப்பட்டமையால் ஒருவேளை உணவையேனும் உண்ண முடியாத மக்கள் இருக்கிறார்கள். இந்தச் சிரமத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

21 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியின் பின்னர் விழுந்துள்ள இந்தப் பாதாளத்திலிருந்து மக்களை மீட்டெடுப்போம். மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் ஊடாக கடமைகளை நிறைவேற்றுவோம் என்றார்.