அக்கரப்பத்தனையில் முச்சக்கரவண்டியிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு !

15 0
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்து சிசுவொன்றின் சடலமொன்று நேற்று திங்கட்கிழமை (09) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் துர்நாற்றம்  வீசியதால்  தோட்ட மக்கள் முச்சக்கரவண்டியினுள் சென்று பார்த்த போது கறுப்புநிற பொலித்தீன் உறையில் போடப்பட்டு சிவப்பு நிறத் துணியொன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் இருந்த சிசுவின் சடலத்தை கண்டு அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

எனினும் சிசுவின் தாய் தொடர்பிலும், மேற்படி சிசுவின் சடலத்தை அவ்விடத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றவர் தொடர்பிலும் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில்  28 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு  பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற  நீதவான் பார்வையிட்டதன் பின்னர் விசாரணைகள் மேற்கொண்டு சிசுவின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (10)  நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .