சமூக விடுதலைக்காக வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை பயன்படுத்துவோம் – பாரத் அருள்சாமி

19 0
மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் எமது மக்களின் ஒரே தெரிவு சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவாகவே இருக்க வேண்டும். எனவே, எமது சமூக விடுதலைக்காக வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை பயன்படுத்துவோம் – என்று இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டி கண்டி மாவட்டத்தில் நியூபிகொக் தோட்டம், சப்ளி தோட்டம், கலுகல்ல தோட்டம், மெல்போர்ட் தோட்டம், டெல்டா தோட்டம், ஸ்டெலன்ட்பேர்க் தோட்டம், டெல்டாதோட்டம் மற்றும் புப்புரஸ்ஸ தோட்ட ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் இ.தொ.காவின் சார்பில் பாரத் அருள்சாமி பங்கேற்றிருந்தார்.

பெருந்திரளான மக்கள் இக்கூட்டங்களில் பங்கேற்று தமது ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உறுதிப்படுத்தினர். இதன்போது உரையாற்றிய பாரத் அருள்சாமி,

“ பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை மற்றும் வீட்டுரிமை பெற்றுக்கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அஸ்வெசும திட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகளும் உள்வாங்கப்பட்டன. அதன்மூலம் பலர் தற்போது நன்மை பெறுகின்றனர். தமக்கு சேவை செய்யக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். ஏனெனில் நெருக்கடியின்போது ஏனையோர்போல் ஓடி ஒளியாது, அவரே முன்வந்து நாட்டை பொறுப்பேற்று வழிநடத்தினார்.

எனவே, எதிரணிகள் தனிப்படை அமைத்து எவ்வாறுதான் போலி பிரசாரம் முன்னெடுத்தாலும் அவற்றை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகியுள்ளது. நாட்டில் மலையக மக்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் இதொகாவின் பேராதரவுடன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதி வெற்றிபெறுவார். கண்டி மாவட்டத்திலும் வெற்றி கொடி பறக்கும்.” – என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்ற பின்னர் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதப்படும் எனவும், தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட பங்குதாரர்களாக்கப்படுவார்கள் எனவும் பாரத் அருள்சாமி மேலும் கூறினார்.

இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, இ.தொ.காவின் பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து, மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களும் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்றிருந்தனர்.