கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

17 0

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது,

வழமையாக பேருந்து தரிப்பிடத்தில் தங்கியிருந்து யாசகம் பெறும் இவர் காலைக்கடனை கழிப்பதற்கு குளக்கட்டினை நோக்கி சென்றிருந்தவேளை யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதேவேளை கல்முனை பொலிஸார் மற்றும்  வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யானைத் தாக்குதலுக்குள்ளானவர் பெரிய நீலாவணை தொடர்மாடி வீட்டுத் திட்டத்தை  வசிப்பிடமாக கொண்ட 68 வயதுடையவர் என்றும் 03 பிள்ளைகளின் தந்தை என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் இந்த நபரை தாக்கியதாக கூறப்படும் தனியன் யானை உட்பட பல யானைகள் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டு மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளன.

உயிரிழந்தவரின் உடல் உடற்கூற்று பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பூரண விசாரணையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.