சாரதி சுகயீனமுற்றதால் விபத்துக்குள்ளான பஸ் : 13 பேர் காயம்

12 0
வவுனியா பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மதவாச்சி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுடன் இருந்த கராஜில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது.

பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது, பஸ்ஸில் 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 06 பேர் மதவாச்சி வைத்தியசாலையிலும் 07 பேர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.