இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, ஒருவர் காயம்

12 0

வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாரியப்பொல – புத்தளம் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (06) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

வாரியப்பொலயிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று அதே திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் வாரியப்பொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இரு பஸ்களினது சாரதிகளும் நடத்துனர்களும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.