மக்களை ஏமாற்றி முட்டாளாக்கும் கீழ்த்தரமான அரசியல் முறையை இல்லாதொழிக்க வேண்டும் – சஜித்!

9 0

இன்று காணப்படுகின்ற சேறு பூசுகின்ற அழுக்கு அரசியலில் மக்களை ஏமாற்றி முட்டாளாக்குகின்ற கீழ்தரமான அரசியல் முறையை நாம் இல்லாதொழிக்க வேண்டும். இன்று வருகின்றார்கள் செல்கின்றார்கள் என்ற வதந்திகள் பரப்பப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தில் எந்த ஒரு மக்கள் பிரதிநிதியையும் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளவோ அல்லது வைத்துக் கொள்ளவோ இல்லை  என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எஹலியகொட நகரில்  நேற்று வெள்ளிக்கிழமை ( 06 ) வெற்றிகரமாக  இடம்பெற்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் 36 ஆவது மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

220 இலட்சம் மக்கள் முன்னிலையில் இன்று கீரியும் பாம்பும் ஒன்றாக இணைகின்ற நிகழ்வு இடம் பெற்றுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கும் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அரசியல் திருமணம் இடம்பெறுகிறது.

இந்த இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து மோசமான கூட்டமைப்பொன்றை உருவாக்கி என்னை தோல்வி அடையச் செய்ய முயற்சிக்கின்றார்கள்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு 200 மில்லியன் ரூபா செலவாகும். இவர்கள் இருவரும் கலந்தாலோசித்து ஜனாதிபதி பதவியையும், பிரதமர் பதவியையும் பிரித்துக்கொண்டால் 200 மில்லியன் செலவிலிருந்து குறைவடையும் என்றும், இதுவரை காலமும் இவர்கள் நாடகமாடி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

இது இவர்களுடைய டீல். இந்த டீலோடு தபால் மூல வாக்களிப்புக்கு முந்தைய தினம் அரச ஊடகத்தில் உரையாற்றுவதற்கு அநுர குமாரவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

எமது நாட்டு வரலாற்றிலே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஒருவர் தோல்வி அடைவேன் என தெரிவித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். தற்போதைய ஜனாதிபதி தோல்வி அடைவார் என அவரே தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க நினைத்திருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியாளர்களும், மொட்டுக் கட்சி ஆதரவாளர்களும் அந்த வாக்குகளை வீணடிக்காமல் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் வரலாற்றுக் காலம் நெடுகிலும் வழி தவற செய்கின்ற மற்றும் காட்டிக் கொடுக்கின்ற வேலையை செய்திருக்கின்றார். 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் தன்னை தோல்வி அடையச் செய்வதற்காக கோட்டாபய உடன் டீல் செய்து கொண்டார்.

அவர் தோல்வி அடைந்தமையால் தன்னுடைய 40 ஆயிரம் பேர்களின் வேலைகளை இல்லாது செய்ததோடு பதவி உயர்வுகளையும் இல்லாது செய்து பழிவாங்கி இருக்கிறார்.

அந்த வேலைகளை செய்த பதில் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்திலும் பழிவாங்கப்பட்ட 40 ஆயிரம் பேர் குறித்து சிந்திப்பதில்லை. அவருக்கு மக்களுடைய எதிர்பார்ப்புகள் குறித்த உணர்வுகள் இல்லை.

இன்று காணப்படுகின்ற சேறு பூசுகின்ற அழுக்கு அரசியலில் மக்களை ஏமாற்றி முட்டாளாக்குகின்ற கீழ்தரமான அரசியல் முறையை நாம் இல்லாதொழிக்க வேண்டும்.

இன்று வருகின்றார்கள் செல்கின்றார்கள் என்ற வதந்திகள் பரப்பப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தில் எந்த ஒரு மக்கள் பிரதிநிதியையும் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளவோ அல்லது வைத்துக் கொள்ளவோ இல்லை.

இந்த நாட்டுக்கு உள்ள ஒரே மாற்று வழி ரணில் அநுர தொடர்பு அல்ல. மக்களின் வேதனையை மக்களின் உயிர் நாடியை உணருகின்ற மக்கள் மயமான, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியுமாகும்.

தான் தெற்கிலே வெற்றி அடைந்திருப்பதாக அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு சென்று கூறுகின்றார். அது வெறும் கனவு. அநுரவும் ரணிலும் அரசியல் ரீதியான சம்பந்த உறவு வைக்கின்ற போது ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களுடன் ஒப்பந்தம் செய்கின்றது.

தம்மிடம் திருடர்களுடனான டீல் இல்லை. தமது ஒரே பொறுப்பு துன்பத்தில் இருக்கின்ற மக்களை மீட்டெடுப்பதாகும் என்றார்.