‘மார்ச் 12’ இயக்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் பகிரங்க விவாதம்

12 0

‘மார்ச் 12’ இயக்கத்தின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, பா.அரியநேத்திரன் ஆகிய 4 ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் பகிரங்க விவாதம்  இன்று சனிக்கிழமை (07) நடைபெறவுள்ளது.

கட்டம் கட்டமாக நடைபெறவுள்ள இப்பகிரங்க விவாதத்தில் பங்கேற்பதாக 38 வேட்பாளர்களில் 16 பேர் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உள்ளடங்கலாக 22 பேர் தமது பங்கேற்பை இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை.

நாட்டில் தூய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘மார்ச் 12’ இயக்கமானது, அந்த இலக்கை அடைந்துகொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறுபட்ட பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்பதாக வேட்பாளர்களின் பங்கேற்புடனான பகிரங்க விவாதமொன்று மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.

அதன் நீட்சியாக இம்முறையும் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்களின் பங்கேற்புடனான பகிரங்க விவாதத்தை நடத்துவதற்கும், அதனை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்புவதற்கும் மார்ச் 12 இயக்கம் உத்தேசித்துள்ளது.

அதற்கமைய இம்முறை தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்த 39 வேட்பாளர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏனைய 38 வேட்பாளர்களுக்கும் விவாதத்தில் பங்கேற்பதற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அவர்களில் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, பா.அரியநேத்திரன், விஜயதாஸ ராஜபக்ஷ, நுவன் போபகே, சரத் மனமேந்திர, அனோஜ் த சில்வா, ஓஷல ஹேரத், பிரியந்த விக்ரமசிங்க, பாணி விஜேசிறிவர்தன, மயில்வாகனம் திலகராஜா, நாமல் ராஜபக்ஷ, கே.ஆர்.கிரிஷான், ரொஷான் ரணசிங்க மற்றும் கீர்த்தி விக்ரமரத்ன ஆகிய 16 வேட்பாளர்கள் இதுவரையில் தமது பங்கேற்பை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இருப்பினும் ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய பிரதான வேட்பாளர்கள் உள்ளடங்கலாக 22 வேட்பாளர்கள் இன்னமும் தமது பங்கேற்பை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் பங்கேற்பை உறுதிப்படுத்திய வேட்பாளர்களில் முதற்கட்டமாக ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷ, சர்வஜன சக்தியின் திலித் ஜயவீர மற்றும் சுயேட்சையாகப் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் ஆகிய நால்வரின் பங்கேற்புடன் இன்றைய தினம் இப்பகிரங்க விவாதம் ஆரம்பமாகின்றது. நாளை (07) பி.ப 3.00 – 5.00 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த விவாதம் சகல தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், மார்ச் 12 இயக்கத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

அதேவேளை விஜயதாஸ ராஜபக்ஷ, நுவன் போபகே, சரத் மனமேந்திர, அனோஜ் த சில்வா, ஓஷல ஹேரத் மற்றும் பிரியந்த விக்ரமசிங்க ஆகிய 6 வேட்பாளர்களின் பங்கேற்புடனான விவாதம் நாளைய மறு தினம்  (08), பாணி விஜேசிறிவர்தன, மயில்வாகனம் திலகராஜா, நாமல் ராஜபக்ஷ, கே.ஆர்.கிரிஷான், ரொஷான் ரணசிங்க மற்றும் கீர்த்தி விக்ரமரத்ன ஆகிய 6 வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமையும் (09) நடைபெறவுள்ளது.