தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பேச சாணக்கியனுக்கு அருகதை இல்லை – வர்ணகுலசிங்கம்

15 0

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பேச சாணக்கியனுக்கு எந்த அருகதையும் இல்லை என தெரிவித்த வடமராட்சி வடக்கு கடற்தொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் முன்னாள் உபதலைவரான வர்ணகுலசிங்கம், தமிழ் மக்களை முழுமையாக நேசிக்கும் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் பொது வேட்பாளரை சாணக்கியன் தேவையில்லாமல் விமர்சிக்கக்கூடாது. எங்களின் பிரச்சினையை தீர்க்காமல் வைத்துக்கொண்டு எம்மை விற்கிறீர்கள். தென்னிலங்கை கட்சிகளோடு சேர்ந்து நின்றுகொண்டு தமிழரை பிரித்தாள்கிறீர்கள். ஆனால், காலப்போக்கில் இதற்கெல்லாம் மக்கள் பதில் செல்வார்கள். வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டுவரப்பட்டவர்தான் தமிழ் பொது வேட்பாளர். ஆகவே தமிழ் பொது வேட்பாளரை விமர்சனம் செய்ய உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

கடந்த 15 வருடங்களாக தென்னிலங்கை கட்சிகளுக்கு அடிமையாக இருந்ததை தவிர நீங்கள் சாதித்தது என்ன? பொருள்களின் விலைகளை எல்லாம் ஏற்றி மக்களை பொருளாதார சுமையில் தவிக்கவிட்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி என்று அரசிடம் கோடி கோடியாக வாங்கி என்ன செய்கிறீர்கள். நாடு அதல பாதாளத்துக்கு போயிருக்கிறது என்றால், இந்தக் காசு எங்கிருந்து வந்தது? மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச் சுமையையாவது குறைத்தீர்களா?

தமிழ் பொது வேட்பாளரை ஒன்றிணைந்து நிறுத்திய அரசியல் கட்சிகள் இன்று என்ன செய்கின்றன?

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சியொன்று இன்னும் பிரசாரத்தில் முழுமையாக இறங்கவில்லை. அக்கட்சியின் இளம் உறுப்பினரிடம் கேட்டபோது கட்சி மேலிடத்திலிருந்து இன்னும் உத்தரவு வரவில்லை என்று கூறியிருக்கிறார். இப்படியான அரசியல் கட்சிகளை தானே நீங்கள் எல்லோரும் இணைத்துவைத்துள்ளீர்கள்.

இன்று எல்லோரும் மக்கள் மத்தியில் முழுமையாக இறங்கி வேலை செய்ய வேண்டும். பிரச்சார பயணமொன்றில் நானும் ஈடுபட்டிருந்த வேளை மக்களிடம் பொது வேட்பாளர் விடயத்தை கூறிய போது இது எப்போதோ செய்திருக்கவேண்டிய வேலை. ஆனால், இப்போதாவது செய்துள்ளீர்கள் என ஆதரவளித்துள்ளனர். உண்மையில் இந்த விடயம் தொடர்பில் கிராமங்களில் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது. தேர்தலுக்கு குறுகிய நாட்களே இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலான பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.  தமிழ் இரத்தம் ஓடுகின்ற எவனும் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்கவும் மாட்டார்கள். தேர்தல் வேலை செய்யவும் மாட்டார்கள்.

இலங்கையில் இருக்கிற தமிழ் மக்களாக இருக்கலாம், முஸ்லிம்களாக இருக்கலாம், எங்களுக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களாக இருக்கலாம்… எல்லோரும் இணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் உரிமை கிடைத்து தமிழ் மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என நினைக்கின்ற சிங்கள மக்களும் சங்கு சின்னத்துக்கு நேரே புள்ளடியிட்டு ஆதரவளிக்க வேண்டும்.

இன்று தமிழ் அமைப்புகள் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக நின்று தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்திருக்க வேண்டும். எல்லோரும் ஒன்றினைந்து தமிழ் பொது வேட்பாளரை வெல்ல வைக்க சங்கு சின்னத்துக்கு எதிரே புள்ளடியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.