நவீன கார்களின் முகப்பு விளக்குகள் திருட்டு ; இருவர் கைது

13 0
பல்வேறு பிரதேசங்களில் உள்ள வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவீன கார்களின் முகப்பு விளக்குகளை (Head Lights) திருடி விற்பனை செய்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய வாகனங்களை பழுதுபார்க்கும் நபரொருவரும்கிரில்லவல வெபட பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 3,100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் கந்தானை, கொச்சிக்கடை, கட்டுநாயக்க, கணேமுல்ல மற்றும் பேலியகொடை ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 12 இலட்சம் ரூபா மதிப்பிலான நவீன கார்களின் முகப்பு விளக்குகளை திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் இருவரும் இதற்கு முன்னரும் நவீன கார்களின் முகப்பு விளக்குகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (06)  ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.