மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக ஜனாதிபதி முன்னிலையில் நால்வர் பதவிப்பிரமாணம்

21 0

மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி. தொடவத்த, ஆர்.ஏ. ரணராஜா ஆகியோரும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கோபல்லாவவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நால்வரும் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்றது.

அரசியலமைப்பின் 107ஆவது சரத்தின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஊவா மாகாண ஆளுநராக அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இதில் கலந்துகொண்டார்.