தபால்மூல வாக்களிப்பு பெறுபேறுகள் : சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி போலியானது

16 0

பால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளோம். எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 4 மணிக்கு பின்னரே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலுக்கு உரிய தபால்மூல வாக்களிப்பு நேற்று (4) ஆரம்பமானது. 1500 அதிகமான வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அரச சேவையாளர்கள் வாக்களித்துள்ளனர். தபால்மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட மூன்று தினங்கள் இன்றுடன் நிறைவடையும்.

இந்த மூன்று தினங்களில் வாக்களிக்காதவர்கள்  எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தமது சேவை பிரதேசத்தில் உள்ள  மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்களிக்க முடியும்.

தபால்மூல வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அமைதியான சூழல் காணப்பட்டது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகள் ஏதும் இடம்பெறுமாயின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் முறைப்பாடளிக்கலாம்.

சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்களால் அவர்கள்  ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.ஆகவே அனைவரும் பொறுப்புடன் தேர்தல் சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டும்.

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானது. எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை  வாக்கெடுப்பு நிறைவடைந்து அன்றைய தினம் மாலை 4 மணிக்கு பின்னரே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்துள்ளோம். தவறான செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்துவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.