ஜேர்மனியில் முனிச் நகரத்தில் இஸ்ரேலிய துணை தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கியுடன் நடமாடிய நபர் – பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலி

27 0

ஜேர்மனியின் முனிச்  நகரில் இஸ்ரேலிய துணை தூதரகத்திற்கு வெளியே சந்தேகநபர் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

பொலிஸாருடனான துப்பாக்கி பிரயோகத்தின் போது காயமடைந்த நபர் பின்னர் உயிரிழந்தார்  என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நபர் ஆயுதங்களுடன் காணப்படுவதை பொலிஸார் கண்டுபிடித்தனர் பின்னர் அவருக்கும் ஐந்து பொலிஸாருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி மோதல் இடம்பெற்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

1972ம் ஆண்டு முனிச் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்ற படுகொலைகளை நினைகூருவதற்காக இஸ்ரேலிய துணை தூதரகம் மூடப்பட்டிருந்த தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

1972 ம் ஆண்டு தாக்குதலில் 11 இஸ்ரேலிய விளையாட்டுவீரர்கள் கொல்லப்பட்டனர்.

உடனடியாக அந்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பொதுமக்களை வீடுகளிற்குள் இருக்குமாறும் ஊகங்களை வெளியிடவேண்டாம் சமூக ஊடகங்களில் படங்களை பதிவிடவேண்டாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்

சம்பவம்  இடம்பெற்ற பகுதியில் ஹெலிக்கொப்டர் ஒன்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதை காணமுடிந்தது.

இஸ்ரேலின் துணைதூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் ஆகியன அமைந்துள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேறு சந்தேகநபர்கள் இருப்பதாக தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.