தபால் மூல வாக்குகளிப்புக்கான இரண்டாம் நாள் இன்று

15 0

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளிப்பு இன்றும் (05) இடம்பெறவுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இன்றும் நாளையும் (06) முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் நேற்று வாக்களிக்க முடியாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நாளை(06) தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்காளர்கள் உரிய திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தாங்கள் பணியாற்றும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், போலியான தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சிலர் பரப்புவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“சிலர் சமூக ஊடகங்கள் ஊடாக போலியாக முடிவுகளை வெளியிடுகின்றன. ஒருவரிடமிருந்து எங்களுக்கு ஒரு போஸ்ட் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் திணைக்களத்திற்கும் உரிய இடங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய போலியான முடிவுகளைக் குறிப்பிடுவது நியாயமான தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகவே தோன்றுகிறது.

இந்த தபால் வாக்குகள் வழக்கமான வாக்குப்பதிவு நாளான செப்டம்பர் 21ஆம் திகதி மாலை 4.00 மணிக்குப் பிறகு எண்ணப்படும்.

எனவே, இது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் கீழ்த்தரமான செயலாகும்.

அவர்கள் தமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை விட தங்கள் வேட்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவே இதனை செய்கிறார்கள்.

எனவே, சமூக ஊடகங்கள் ஊடாக இது போன்ற தவறான தகவல்களை பரப்பும் போது, இதை அடிப்படையாக வைத்து பிரதான செய்திகளுக்கு இதை பயன்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.