“நித்யானந்தாவின் ‘கதவைத் திற காற்று வரட்டும்’ வரிகள் மிகவும் பிடிக்கும்” – ஐகோர்ட் நீதிபதி

21 0

நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட மடங்களுக்கு தக்கார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நித்யானந்தா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, நித்யானந்தாவின் ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற வரிகள் தனக்கு ரொம்பப் பிடிக்கும் எனக் கருத்து தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாச்சல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோயில் மடம் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார். இதுதொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நான்கு மடங்களையும் நிர்வகிக்க தக்காரை நியமித்து இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. அறநிலையத் துறையின் இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் வழக்கு தொடர பொது அதிகாரம் வழங்கப்பட்ட நித்யா கோபிகா ஆனந்த் என்ற உமாதேவி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி எம். தண்டபாணி முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “உமாதேவிக்கு வழங்கப்பட்டுள்ள பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளது. எனவே, அதுதொடர்பாக நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே, அவரை இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்துங்கள்” என மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கூறினார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், “நித்யானந்தா தற்போது இந்தியாவில் இல்லை. மேலும், அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல” என்று சொல்லப்பட்டது. அதற்கு நீதிபதி தண்டபாணி, “இந்த வழக்கே நித்யானந்தாவுக்காகத்தான் தொடரப்பட்டுள்ளது எனும்போது. அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது நீதிமன்றத்துக்கு கட்டாயம் தெரிய வேண்டும். ஒருவேளை அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றால் காணொலி காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லுங்கள்” என்றார்.

இதற்கு மனுதாரர் தரப்பில், “அவரால் ஆஜராக இயலாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, “அந்த 4 மடங்களையும் நிர்வகிக்க தக்காரை நியமித்து அறநிலையத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், நித்யானந்தாவின் ஆன்மிக உரைகள் சிறப்பானவை என்றும், அவரது ‘கதவைத்திற காற்று வரட்டும்’என்ற வரிகள் ரொம்பப் பிடிக்கும். அந்த வார்த்தைகளில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. காஞ்சி பெரியவர் கூறியதுபோல சன்னியாசி, சன்னியாசியாகவே இருக்க வேண்டும்” என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.