இன்னல்களை தீர்ப்பதற்கான இலக்கே இந்ததேர்தல்

16 0
கடந்தகால இன்னல்களைத் தீர்ப்பதற்கான இலக்காகவும் அடையாளமாகவும் இந்த தேர்தல் இருக்கும். என தமிழ்பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளதுடன் தேர்தலின் பின்னர் தமிழரசுக்கட்சியுடன் மாத்திரமே பயணிப்பேன் என்றுதெரிவித்தார்.

நமக்காக நாம் என்ற தேர்தல்பிரச்சாரப்பணிக்காக புதன்கிழமை (4) வவுனியாவிற்கு விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்;

மக்கள் நல்ல உத்வேகத்துடன் இருக்கின்றனர். சங்கு சின்னத்துக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டனர். கடந்த எட்டு ஜனாதிபதிகளாலும் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், பல துன்பங்களைச் சந்தித்திருக்கின்றோம்.

இந்த தேர்தல் என்பது நான் வெற்றிபெறுவதற்கான தல்ல. இனம் வெற்றிபெறவேண்டும் என்பதுவே எனது இலக்கு. இனத்தின் அடையாளமாகவே நான் நிறுத்தப்பட்டிருக்கின்றேன். எனது சின்னத்துக்கு வாக்களிக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு நீங்களே வாக்களிப்பதாகவே அர்த்தம்.

கடந்தகால இன்னல்களைத் தீர்ப்பதற்கான இலக்காகவும் அடையாளமாகவும் இந்த தேர்தல் இருக்கும். இந்தத்தேர்தலின் முடிவுகள் சர்வதேசத்தின் மனசாட்சியை நிச்சயம் உறுத்தும். இந்தியாவிற்கும் ஒரு செய்தியினை சொல்லும். தமிழர்களுக்குச் சுயநிர்ணய உரிமையினை வழங்கவேண்டும் என்று அரசையும் வலியுறுத்தும்.

கடந்தகாலங்களில் பலபோராட்டங்களைத் தமிழினம் கண்டுள்ளது. இதுபுள்ளடி போடும் ஒரு போராட்டம். அனைவரும் இந்த பணியினை உறுதியுடன் செய்யவேண்டும்.

எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மீனவர் பிரச்சனை விவசாயிகள் பிரச்சனை உள்ளடக்கப்பட்டிருந்தது. அது பிரதி எடுக்கப்படும்போது தற்செயலாகவே விடுபட்டுள்ளது. அந்த விடயங்கள் இறுதிப்பிரசுரத்தில் நிச்சயம் உள்ளடக்கப்படும். மீனவர் பிரச்சனை என்பது பாரியபிரச்சனை. இந்தியாவைப் பகைப்பதற்கும் வெறுப்பதற்கும் அப்பால் இந்தியாவை அணைத்துக்கொண்டு மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

அத்துடன் தேர்தலின் பின்னரும் நான் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் மாத்திரமே பயணிப்பேன். அதில் மாற்றுக்கருத்தில்லை. கட்சியால் என்னிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சந்தர்ப்பம் வரும் போது அதற்கான விளக்கத்தினை அவர்களுக்கு வழங்குவேன்.