அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வு ; அரசாங்கம் அரச ஊழியர்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது

13 0

அரசாங்க ஊழியர்களிற்கு சம்பளஉயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பிற்கு முன்னதாக அரசாங்கம்  பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என பவ்ரல் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை எதிர்வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் குறித்து நான் முரண்படவில்லை,எனினும் இந்த மூன்று தீர்மானங்களும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் இவை பாரதூரமானவை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வார அமைச்சரவைகூட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை  அதிகரிப்பதற்கும்,வரிகளை குறைப்பதற்கும் உள்ளுராட்சி சபை தேர்தலிற்கான வேட்பு மனுக்களை இரத்துச்செய்வதற்கும்  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் தபால்மூல வாக்களிப்பிற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் வெளியான இந்த அறிவிப்பு 14 மில்லியன் அரசாங்க ஊழியர்களை கவருவதற்கான முயற்சி என அவர் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களிற்கு முன்னரே அரசாங்கம் ஒருசதம் கூட சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் மூலம் அரசாங்கம் தெரிவித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வை வழங்கும் அளவிற்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?உத்தேச சம்பள அதிகரிப்பை வழங்குவது என்றால் அரசாங்கத்திற்கு மாதமொன்றிற்கு 20 மில்லியன் தேவை என தெரிவித்துள்ள ரோகண ஹெட்டியாராச்சி இவ்வாறான அறிவிப்புகள் மூலம் அரசாங்கம் அரசாங்க ஊழியர்களை ஏமாற்ற முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.