மாகாண சபைத் தேர்தல் (திருத்தச்) சட்டமூலம் ஆளும்,எதிர்தரப்பு கடும் தர்க்கம்

12 0

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக கொண்டு வந்த மாகாண சபைகள் தேர்தல் (திருத்தச்) சட்டமூலம் 3 ஆம் வாசிப்புக்காக செவ்வாயக்கிழமை (3) எடுக்கப்படவிருந்த நிலையில் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் அது உள்ளடக்கப்படவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி எம்.ஏ. சுமந்திரன் ஜனாதிபதியை கடுமையாக சாடி, இதுவொரு அரசியல் பழிவாங்கள் என்று குறிப்பிட்டார்.

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படாமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தனர். இதனால் ஆளும் மற்றும் எதிர் தரப்பினருக்கிடையில் கடும் தர்க்கம் நிலவியது.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற அமர்வின் போது விசேட  கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிரணியின் சுயாதீன உறுப்பினர் விமல் வீரசன்ச, ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள  வேளையில்  மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பாக தனிநபர் பிரேரணையை கொண்டு வருவது தவறு. இந்த சட்டமூலம் தொடர்பில்  விவாதிக்காது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது .

தனிநபர் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது இது தொடர்பில் நான் கேள்வியெழுப்பினேன். இது தொடர்பில் பிரச்சினைகள் கிடையாது என்றும். இது சட்டவாக்க சபைக்கு அனுப்பப்பட்டு மீண்டும் வரும் என்றும் கூறப்பட்டது. இதனால் விவாதத்தை கோரவில்லை.

இப்போது ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது. புதிய  ஆணையில் புதிய ஜனாதிபதி தெரிவாகவுள்ளார். அப்போது செய்யலாம். இந்த நேரத்தில் குறித்த தனிநபர் பிரேரணை போன்ற நடவடிக்கைகள் பொருத்தமானது அல்ல. மக்கள் பிரதிநிதிகள் உள்ள சபையில் தேவையான கலந்துரையாடல்களை நடத்தாமல் அவ்வாறு செய்ய முடியாது  என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய எதிரணியின் சுயாதீன உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, விவாதத்தை கேட்கும் நடவடிக்கை இரண்டாம் வாசிப்பு காலத்திலேயே இடம்பெற்றிருக்க வேண்டும். எவரும் அப்போது விவாதத்தை கோரவில்லை. இப்போது மூன்றாம் வாசிப்பே இருக்கின்றது. இதனால் அந்த நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லலாம். 8 வருடங்களுக்கும் மேலாக மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படாது இருக்கின்றது. மாகாண சபைகளை அரச அதிகாரிகளே  நிர்வகிக்கின்றனர். இதனால் சுமந்திரன் கொண்டு வந்த தீர்மானத்தின்படி அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல,

கடந்த ஆகஸ்ட் மாதம்  8ஆம் திகதி  இந்த சட்டமூலம் மீதான  2ஆம் வாசிப்பு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 3ஆம் திகதி  சபைக்கு முன்வைப்பதாக ஆரம்பத்தில்  இணங்கினார்கள். அதனை செய்யாத காரணத்தினாலேயே அது பற்றி கேட்கின்றோம். இதேவேளை மாகாண சபைகள் இன்றி ஆளுநர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுவதுடன் தேர்தல் சட்டங்களையும் மீறுகின்றனர். மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் இணங்கினோம். பழைய முறையிலாவது தேர்தலை நடத்தலாம் என்றே கூறியுள்ளோம். இதனை புதன்கிழமை (4) கொண்டு வர முடியுமா? என்றார்.

சுயாதீன எதிரணியின் உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க குறிப்பிடுகையில், இது தனிநபர் பிரேரணையாக கொண்டு வரப்பட்ட போது நாங்கள் இரண்டாம் வாசிப்பின் போது விவாதம நடத்த முடியுமா என்று கேட்டோம்.ஆனால் அப்போது இது சட்டவாக்க சபைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினர்.

எவ்வாறாயினும் கலப்பு முறையில் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்படும் நிலையில், அதேபோன்று மாகாண சபைகள் தேர்தல் நடக்க வேண்டும் என்றே யோசனை கொண்டுவரப்பட்டது. அதனை விடுத்து பழைய முறையில் செல்ல வேண்டும் என்பது இது பைத்தியக்காரர்களின் இடமா ? ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் இவ்வாறான விடயங்களை செய்ய வேண்டாம். ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு அது தொடர்பில் நடவடிக்கை எடுங்கள் என்றார்.

எதிர்க்கட்சி சுயாதீன உறுப்பினரான  டலஸ்  அழகப்பெரும உரையாற்றுகையில், மக்கள் பிரதிநிதிகளின் நிறுவனங்கள் மூன்று உள்ளன. அவற்றில் இரண்டு மூடப்பட்டுள்ளன. அதற்கான காரணம் என்ன? ஜனநாயகத்தை விலைக்கோ  அல்லது  பலவந்தமாகவோ  வாங்க முடியாது. பதவிக் காலத்தை விடவும் அதிக காலம் மாகாண சபைகள் மூடப்பட்டுள்ளன என்றார்.