ரஷ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்கும் முயற்சியை கைவிடவில்லை

16 0

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியர்களை அனுப்புவதை போன்று இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது என  ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என வெளிவிவகாரம், மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற அமர்வின் போது   விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய தயாசிறி ஜயசேகர மற்றும்  காமினி வலேகொட  ஆகியோர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விசேட கூற்றை  முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,  ரஷ்ய இராணுவத்துக்கு சென்று நெருக்கடிக்குள்ளாகிய 600 இலங்கையர்கள்  குறித்து முன்னேற்றகரமான எவ்வித தீர்வும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இலங்கையர்களில் 17 உயிரிழந்துள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது,  தற்போது 20  பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

உயிரிழந்த இராணுவத்தினர்  இலங்கை  இராணுவ சேவையில் இருந்து ஓய்வுப் பெற்று,  ஓய்வூதியம் பெற்றவர்கள் ஆகவே இவர்களுக்கு  ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும்.அத்துடன்  ரஸ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஆவணங்களை இலங்கையில் இருந்து ரஸ்யாவுக்கு அனுப்பி வைப்பதற்கு முத்திரை கட்டணமாக 2 இலட்சம் ரூபா கோரப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து நெருக்கடிக்குள்ளாகியுள்ளவர்களின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இவர்களின் நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கம் நேரடியாக தலையிட்டு ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய வெளிவிவகாரம் மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி,   ரஸ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை கைவிடவில்லை.  தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

இந்தியர்களை அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வைப்பதை போன்று இலங்கையர்களை அனுப்பி வைக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக  ரஸ்யாவில் உள்ள இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.ஆகவே முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.