மத்திய வங்கி ஆளுநரின் கூற்று தவறானது : தேர்தல் காலத்தில் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் – அத்துரலியே

15 0

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை மாற்றியமைத்தால்  நாடு மீண்டும் வீழ்ச்சியடையும்  என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தேர்தல் காலத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானது. நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை மாற்றியமைத்தால்  பாதிப்பு ஏற்படும் என்பது மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு செயற்பாடாகும் என  பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வதேச நாணய நிதியம் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.  சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக  ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைக்கு அமைய மத்திய வங்கியின் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் பெரும்பாலான உறுப்புரைகள் மக்கள் வாக்கெடுப்புக்கு செல்லும் விடயங்களை உள்ளடக்கியுள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள் . இந்த சட்டம் எளிய பெரும்பான்மையுடன் தான் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை பிரஜையால் மத்திய வங்கி சட்டம் தயாரிக்கப்படவில்லை. மாறாக வெளிநாட்டு முகவர் ஒருவரினால் தான் சட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை பாராளுமன்றம்  அறிந்திருக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்ட நிகழ்ச்சி நிரலை மறுசீரமைக்க முடியாது என்று குறிப்பிடப்படுகிறது.

நாணய நிதியத்தின்  செயற்திட்டத்தை மாற்றினால் சமூக கட்டமைப்பில்  பாரிய நெருக்கடிகளும், பிரச்சினைகளும் தோற்றம் பெறும் என்று ஒரு தரப்பினர் தவறான நிலைப்பாட்டை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்ட நாடுகளில் அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்தன, எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை  கைப்பற்றின.

பொருளாதார நெருக்கடிக்கு நாணய நிதியம் மாத்திரம் இறுதி தீர்வல்ல, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எவ்வளவு அரசமுறை கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன,   எந்த கருத்திட்டத்துக்காக கடன் பெற்றுக் கொள்ளப்பட்டன.

மத்திய வங்கி சட்டம் நாட்டின் தேவைக்காக நிறைவேற்றப்பட்டதா அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்காக நிறைவேற்றப்பட்டதா,? இந்த சட்டத்தில் நாட்டுக்கு எதிரான  விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதை அரசாங்கம் அறிந்துள்ளதா, ?

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை மாற்றியமைத்தால்  நாடு மீண்டும் வீழ்ச்சியடையும்  என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தேர்தல் காலத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானது ஆகவே முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்.