ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு எந்த தீய சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை

16 0

சிறிமா அம்மையாருக்கு எதிராக செயற்பட்டு அன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க நடவடிக்கை எடுத்ததுபோன்று இன்றும் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு, பாராளுமன்றம் சென்று, தற்போது கட்சியின் பெயரால் மோசடிகளை மேற்கொண்டு கட்சியை அழிக்க முற்படுகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிப்பதற்கு எந்த தீய சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை என்ற உறுதியை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு முன்னால் வழங்குகிறேன் என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு திங்கட்கிழமை (02) காலிமுகத்திடலில் அமைந்துள்ள அதன் ஸ்பாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்துவந்து எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1951 செப்டம்ர் 2ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஸ்தாபித்தார். ஏழை, விவசாய மக்களுக்கு சக்தியாகவே கட்சி அமைக்கப்பட்டது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் மறைவுக்கு பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க கட்சின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றார்.

ஜே.ஆர். ஜயவர்த்தன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிப்பதற்கு முன்னெடுக்காத நடவடிக்கைகள் இல்லை. சிறிமா அம்மையாருக்கு பல்வேறு வேதனைகளை காெடுத்துவந்தார். அவரின் பிரஜா உரிமையை  இரத்துச்செய்து. தேர்தலில் அவர் போட்டியிடாமல் தடுத்து வந்தார்.

என்றாலும் அம்மையார் தைரியமாக இருந்து அனைத்துக்கும் முகம்கொடுத்து, கட்சியை பாதுகாத்து வந்தார். மக்களும் அவருடன் இருந்து தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தனர். அன்று எவ்வாறு சிறிமா அம்மையாருக்கு எதிராக செயற்பட்டு கட்சியை அழிக்க நடவடிக்கை எடுத்ததுபோன்று இன்றும் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு, பாராளுமன்றம் சென்று, தற்போது கட்சியின் பெயரால் மோசடிகளை மேற்கொண்டு கட்சியை அழிக்க முற்படுகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிப்பதற்கு எந்த தீய சக்திகளுக்கும் இடமளிப்பதில்லை என்ற உறுதியை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு முன்னால் வழங்குகிறேன். எதிர்காலத்தில் அமைக்கப்போகும் அரசாங்கத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இருக்கும் ஆதரவாளர்களுடன் இணைந்து அமைப்போம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 7ஆவது தலைவர் நான்.தற்போது அதற்கு நீதிமன்றில் இடைக்கால தடை ஒன்று இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் வழக்கு விசாரணைகளின் பின்னர் அந்த தடை நீங்கிய பின்னர், இந்த பிரச்சினைகள் இல்லாமல் போகும்.

கட்சியின் பெயரால் அனைத்து வரப்பிரசாதங்களை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களே இன்று கட்சிக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடவில்லை. 2பேர் சஜித்துடன் இருக்கின்றனர். 4பேர் ரணிலுடன் இணைந்துள்ளனர். ஏனையவர்கள் எம்முடனே இருக்கின்றனர்.

அதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கையை பாதுகாத்து நாங்கள் கட்சியை முன்னெடுத்துச்செல்வோம். கட்சியில் இருந்து சென்றவர்கள் அங்கே இருந்துகொள்ளட்டும்.

தேர்தலுக்கு பின்னர் அவர்கள் மீண்டும் கட்சிக்கு வந்தால், எமது கொள்கையுடன் ஒத்துப்போகுமானால்,அவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்போம்.

அத்துடன் தற்போது கட்சியில் இருந்து பிரிந்து சென்றிருக்கும் எவரும் அடுத்த பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.