விக்கிரவாண்டி தவெக மாநாடு: 21 கேள்விகளுக்கு பதில் கேட்டு புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை கடிதம்

29 0

 விக்கிரவாண்டியில் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு செய்யப்படவிருக்கும் ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் அடங்கிய கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் மாவட்ட காவல் துறை அனுப்பி இருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு 5 நாட்களுக்குள் பதிலளிக்கவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ம் தேதி கூட்டுகிறார் நடிகர் விஜய். இதற்காக அனுமதி கோரி கடந்த 28-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் அக்கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அன்றே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, “மாநாடு நடத்த தேர்வு செய்யப்பட்ட இடம் தேசிய நெடுஞ்சாலைக்கும், ரயில் பாதைக்கும் இடைப்பட்டதாகும். இங்கு 5-க்கும் மேற்பட்ட ஆழமான கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளை மூடவேண்டும். மேலும், ஒரு நபர் அமர 10 சதுர அடி இடம் தேவைப்படும். மேடைக்கு 5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டாலும் ஒரு ஏக்கருக்கு 4,300 பேர் வரை அமரலாம். அதன்படி சுமார் 3 லட்சம் பேர் வரை மாநாட்டுத் திடலில் அமரலாம்.