வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் ஊழியர்கள் மீது தாக்குதல்

20 0
வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு 12:15 மணியளவில் எரிபொருள் நிரப்ப வருகை தந்த மூவர் அடங்கிய குழுவினர் அங்கு கடமையில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு பொலிஸாரோடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

ஞாயிற்றுக்கிழமை (01) இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியரோடு தர்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர்களில் ஒருவர் அங்கு வேறு கடமையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல் நடத்தினார்.

இதன்போது போக்குவரத்து பொலிஸார் இருவர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை தடுப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த மற்றைய ஊழியர்  சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு முச்சக்கர வண்டியில் பொலிஸார் வருகை தந்த போது தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.