நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

31 0

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை நடைபெற்றது.

இந்நிலையில், காலை 6.15 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் காலை 08.30 மணியளவில் தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது.

இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களிலிருந்தும் , வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருகப் பெருமானை வழிபட்டனர் .

நாளைய தினம் திங்கட்கிழமை (02) காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை 5 மணிக்குக் கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.