நாட்டை தவறுதலானவர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டாம் – பாரத் அருள்சாமி

19 0
இனவாதத்தை தோற்றுவித்து அதன்மூலமாக பல சமூகங்களைப் பிரித்து ஆட்சி செய்த பலர் இன்றைக்கு எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியாத அளவிற்கு விலாசம் இல்லாமல் காணாமல் போயிட்டார்கள். நாம் அன்று எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல், வாக்களித்ததனால் தான் கடந்த காலங்களில் நாம் கஷ்டத்தை அனுபவித்தோம். அதன்பின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் ஒரு சுமூகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார் என இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கண்டி அக்குறனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதுமட்டுமில்லாமல், அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சை பொறுப்பேற்ற பின், எடுத்துக் கொண்ட ஆய்வு அறிக்கையின் படி, எங்களுடைய மக்களுடைய ஜனாசாக்களை, எரிச்சதோ அல்லது தவறான முறையில் பயன்படுத்த தோன்றிய கொள்கை தீர்மானத்தை, ஆய்வு அடிப்படையில் நிரூபித்து இன்றைக்கு அரசாங்கத்தை முஸ்லீம் மக்களிடையே மன்னிப்பு கேட்க வைத்திருக்கின்றோம்.

இந்த விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருமை கொள்கின்றது. காரணம் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை இல்லாமல் செய்து, எங்களை வேறுபாடு காட்டி  பார்த்ததனால் தான், ஒருசாரரார் முன்னோக்கி செல்ல. மற்றொரு சாரரார் பின்னோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

கண்டி மாவட்டத்தில் மட்டும் தமிழ் பேசும் மக்கள் அதிகளவில இருக்கின்றோம். ஒரு இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லீம் வாக்காளர்களும், ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் வாக்காளர்களும் இருக்கின்றோம்.

ஆனால் எங்களுடைய அடையாளத்தைப் பாதுகாக்க கூடிய, சில தலைமைகளை நாங்கள் தேர்ந்தெடுக்காததனால் நாங்க சில முக்கியமான எங்களுடைய அடிப்படைத் தன்மைகளையும் உருவாக்கங்களையும் விட்டுக்கொடுத்துட்டுத் செல்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இன்று 40 கட்சிகளுக்கும் அதிகமானவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்கியுள்ளனர். ஜனாதிபதியாக ரணில் அவர்கள் தேர்ந்தெடுத்த பின்னர் பாராளுமன்றத் தேர்தலோ, பிரதேச சபைத் தேர்தலோ, மாகாண சபைத் தேர்தலோ நடைப்பெற்றால், நீங்கள் ஊழல்வாதிகளையும், சுயநல அரசியல்வாதிகளையும் நிராகரியுங்கள்.

அது உங்களுடைய கைகளியே இருக்கின்றது. ஆனால் இன்று அவர்களை காரணம் காட்டி, அதில் உள்ளவர்களை காரணம் காட்டி நாட்டினுடைய தலைவிதியை தவறுதலானவர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டாம் என்பதை நான் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.