சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகும் வரை தலைவருக்குரிய அதிகாரங்களை கௌஷல்ய நவரத்ன பயன்படுத்தக்கூடாது!

19 0

ஜனாதிபதி சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகும் வரை அவர் தலைவருக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தக்கூடாது என சட்டத்தரணிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன பதவி விலகவேண்டும் என சட்டத்தரணிகள் பேரவையில் சனிக்கிழமை (31) ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்துக்கும் (ஜைக்கா) இடையில் இடம்பெற்ற உடன்படிக்கை மற்றும் கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பில் கௌஷல்ய நவரத்ன வெளிப்படைத்தன்மையை பேணவில்லை எனவும், அதன் மூலம் அவர் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் பேணவேண்டிய நம்பகத்தன்மையை மீறியிருக்கிறார் எனவும் சர்சைக்குரிய ஜைக்கா விவகாரம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஐவரங்கிய குழு அறிக்கை சமர்ப்பித்தை அடுத்தே மேற்குறிப்பிட்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன், இக்ரம் மொஹமட், ரின்ஸி அர்ஸகுலரத்ன மற்றும் ஜெஃப்ரி அழகரத்னம் ஆகிய ஐவரடங்கிய குழுவே சர்ச்சைக்குரிய சட்டத்தரணிகள் சங்கம் – ஜைக்கா கொடுக்கல், வாங்கல் குறித்து ஆராய்வுகளை மேற்கொண்டது.

அதற்கமைய அக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகும் வரை, அவர் தலைவருக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தக்கூடாது என சட்டத்தரணிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.