தேர்தல்கள் ஆணைக்குழு நியாயமான முறையில் செயற்படவில்லை

15 0

தேர்தல்கள் ஆணைக்குழு நியாயமான முறையில் செயற்படவில்லை. 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு  மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெப்ரல் அமைப்பு ஒரு தரப்பிடமிருந்து கப்பம் பெற்று விட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு சில ஊடகங்களும் கீழ்த்தரமாக செயற்படுவதாக  பாராளுமன்ற உறுப்பினர்    ரொஷான் ரணசிங்க குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில்  இன்று புதன்கிழமை (21) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானது என்றாலும் நீதியானதாக இடம்பெறுகிறதா  என்ற கேள்விகள் எழுகின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவே முதலில் அநீதியை இழைக்கின்றது. சில வேட்பாளர்களுக்காக அவர்களின் உதவியாளர்களை அழைத்துவர தனியான இடம் ஒதுக்கியுள்ளது. 39 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கையில் 4 வேட்பாளர்களுக்காக மட்டும் தனி இடம் ஒதுக்குவது அவர்களுக்காக ஊக்குவிப்பாகவே அமைகின்றது. இது  தேர்தல்கள் சட்டத்துக்கு சாதகமானதா?

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்காக 20 ரூபாவே செலவிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரால் 109 ரூபா செலவிட முடியுமென அறிவித்துள்ளது. அப்படியென்றால்  ஒரு வேட்பாளர்  180  கோடி வரை செலவழிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சிறிய தொகையல்ல. தேர்தல்கள் செலவினங்களை  ஒழுங்குப்படுத்தும் சட்டம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோன்று சில ஊடகங்களும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்காகவும் செயற்படுகின்றது. 39 பேருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும். ஆனால் தற்போது ஒருசில ஊடகங்கள் மிகவும் கீழ்த்தரமான முறையில்  தங்களுக்கு இணக்கமான வேட்பாளரை மாத்திரம் ஊக்குவிக்கின்றன.

நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்கும்  பெப்ரல் நிறுவனமும் தற்போது  அநீதியான முறையில் நடந்து கொள்கிறது.  பொருளாதார கொள்கைகள் தொடர்பான  விவாதத்துக்கு  தெரிவு செய்யப்பட்ட 6 வேட்பாளர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெப்ரல் அமைப்பு ஒரு தரப்பிடமிருந்து கப்பம் பெற்று விட்டதா என்று எண்ண தோன்றுகிறது.

இது நீதியான தேர்தலா? செலவு கட்டுப்பாடு தொடர்பான சட்டத்தின் எதிர்பார்ப்பு என்ன? கறுப்புப் பணம், போதைப்பொருள் பணம், பாதாள குழுக்களின் பணம், சூதாட்ட பணம் என்பன இந்தத் தேர்தலில் புழக்கத்தில் உள்ளது. இப்படி போனால் எதிர்காலத்தில் நாடு அழிவையே எதிர்நோக்கும்.

நாட்டின் கடன் தொகை அதிகரித்துள்ளதுடன் டொலர் விலையும் அதிகரித்துள்ளது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் விசேட அவதானம் செலுத்த வேண்டும். நாட்டை சௌபாக்கியமான யுகத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். எமக்கென பொறுப்புகள் உள்ளன. நீதியான தேர்தலை நடத்தி, ஊழல் அற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்றார்.