பேருந்தில் பயணம் செய்து புதிருக்கு விடை கண்டுபிடிக்கும் போட்டி: மாநகர போக்குவரத்து கழகம் அழைப்பு

30 0

பேருந்தில் பயணித்து புதிருக்கு விடை கண்டுபிடிக்கும் போட்டியில் பங்கேற்க மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாதத்தையொட்டி, பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக சென்னை பஸ் டிரெஷர் ஹண்ட் (Chennai bus treasure hunt) என்ற போட்டியையும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இதில் கலந்துகொள்ள விரும்பும் 16 வயதுக்கு மேற்பட்டோர் குழுவாக பங்கேற்கலாம். ஒரு குழுவில் 2-3 நபர்கள் இருக்கலாம். அதில் ஒருவர் குழுவின் தலைவராக இருக்க வேண்டும்.

மொத்தம் 60 குழுக்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். எனவே, விரைவாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த 60 குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஆக.25-ம் தேதி போட்டி நடைபெறும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் பல்லவன் இல்லத்துக்கு வர வேண்டும்.

அவர்களிடத்தில் ஒரு துப்பு கொடுக்கப்படும். இதன் மூலம் அவர்கள் அடுத்துச் செல்ல வேண்டிய இடத்தை கண்டுபிடிக்க வேண்டும். அங்கு மாநகரப் பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். அவ்வாறு முதலில் செல்வோர், அங்குள்ள தன்னார்வலரிடம் இருந்து அடுத்த துப்பு பெற்றுக் கொண்டு அடுத்து செல்ல வேண்டிய இடம் என அடுத்தடுத்து பேருந்துகளில் பயணிக்க வேண்டியிருக்கும்.

இறுதியாக செல்ல வேண்டிய இடத்துக்கு யார் முதலில் வருகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். அக்குழுவுக்கு ரூ.15 ஆயிரமும், அடுத்தடுத்து வருவோருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகை வழங்கப்படும்.

முன்பதிவுக்கு https://t.co/EQT4hGEZKl என்ற இணையதளத்தை அணுகலாம். மேலும் விவரங்கள் மற்றும் போட்டிக்கான நிபந்தனைகளை அறிய, 99439 97373 என்ற எண்ணை வாட்ஸ் ஆப்-ல் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.