ஜனாதிபதி தேர்தல் ரணில் விக்ரமசிங்கவின் அரசியலின் இறுதிப்பயணம்

20 0

இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலுடன் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணத்தின் இறுதிப்பயணமாகும். கட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போன அவர் எவ்வாறு நாட்டை பாதுகாக்கப்போகிறார் என கேட்கிறோம் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது தேர்தல் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இருந்து யானையை நீக்கியமைக்காக ரணில் விக்ரமசிகவுக்கு டி,எஸ். சேகாநாயக்க எங்கிருந்தாவது சாபமிடுவார் என்றே நான் நினைக்கிறேன்.

ரணில் விக்ரமசிங்கவின் 30 வருடகால தலைமைத்துவத்தின் கீழ் 106 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த ஐக்கிய தேசிய கட்சி 2020 பொதுத் தேர்தலுடன் காணாமல் போகும் என நான் 2018ல் தெரிவித்திருந்தேன். அவரின் தலைமையில் அவருக்கு கட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது.

கட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போயிருக்கும் ரணில் விக்ரமசிங்க எவ்வாறு நாட்டை பாதுகாக்கப்போகிறார்.? தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சி ஒன்று இல்லை. வேறு ஒரு குழுவுக்குரிய தேர்தல் சின்னமான எரிவாயு சிலிண்டரை எடுத்துக்கொண்டே போட்டியிடுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.இது மிகவும் கவலைக்குரிய நிலையாகும்.

என்றாலும் என்னை பொறுத்தவரை நான் ரணில் விக்ரமசிங்கவை மதிக்கிறேன். எனெனில் இந்த தேர்தலுடன் முடிவடையப்போகும் அவரது அரசிய பயணத்தில், அவர் தனிமையாக சென்று கடலில் குதிக்காமல், தன்னுடன் இருக்கும் திருடர்கள், மோசடிகாரர்களையும் இணைத்துக்கொண்டு கடலில் குதித்து, நாட்டுக்கு செய்யும் உதவிக்கு நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன் என்றார்.