மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் வழிப்பறி கொள்ளை!

15 0

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை தாக்கி காயப்படுத்தி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பறித்துச் சென்ற தங்கச் சங்கிலியின் மொத்த பெறுமதி ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பெண்ணொருவர் அநுராதபுரம், புத்தகயா மாவத்தையில் உள்ள கடை ஒன்றை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது, அவ்வழியாக மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் இந்த பெண்ணை வழிமறித்து பலமாக தாக்கியுள்ளனர்.

பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.