ரயில் மோதி லொறி விபத்து ; ஒருவர் பலி ; ஒருவர் காயம்

23 0
கொஸ்கொட, இதுருவ பிரதேசத்தில் ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (19) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கொஸ்கொடையிலிருந்து விறகுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில்  மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, லொறியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுருவ பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.