அதிமுக அணிகள் இணைப்பு: மீண்டும் ஊழல் ராஜ்யத்தை நடத்த சதி திட்டம் – மு.க.ஸ்டாலின்

295 0

முதல்-அமைச்சர் எடப்பாடி – ஓ.பி.எஸ். அணிகள் தமிழகத்தின் கஜானாவை சுரண்டி எடுத்தது போதாது என்று மீண்டும் ஒரு முறை ஒருங்கிணைந்து ஊழல் ராஜ்யத்தை நடத்த சதித்திட்டம் போடுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“வருமான வரித்துறை ரெய்டும்“ “அ.தி.மு.க.விற்குள் குழப்பமும்“ ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கை கோர்த்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க.வில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அரிதாரம் பூசி அரங்கேறும் நாடகங்கள் இதைத் தான் உலகத்திற்கு வெளிப்படுத்துகின்றன.

நேற்றுவரை பரம விரோதிகள், முதல் குற்றவாளிகள், ஊழல் பெருச்சாளிகள் இன்று கைகோர்த்து, “தமிழக நலன் காக்கப் போகிறோம்“ என்று ஊரை ஏமாற்றும் இன்னொரு அவதாரத்தை எடுத்திருக்கிறார்கள்.

“ஹைவேஸ் புகழ்” முதல்-அமைச்சர் எடப்பாடி அணியும், “மணல் மாபியா சேகர்ரெட்டி வழி காட்டும் ஓ.பன்னீர்செல்வம் அணியும்“ தமிழகத்தின் கஜானாவை ஜல்லிக்கரண்டி போட்டு சுரண்டி எடுத்தது போதாது என்று மீண்டும் ஒரு முறை “ஊழல் ராஜ்யத்தை” ஒருங்கிணைந்து நடத்த சதித்திட்டம் போடுகிறார்கள்.

கரூர் அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற ரெய்டு விவகாரத்தில் இன்றுவரை “கண்ணாமூச்சி” விளையாட்டு நடத்தப்படுகிறது. அந்த ரெய்டில் மாட்டிய ஆவணங்கள் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று தேர்தல் ஆணையமே சுட்டிக்காட்டியும் அதற்கு மேல் சோதனை வளராமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் பிறகு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடுகளிலும், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி வீட்டிலும் நடைபெற்ற சோதனைகளும் என்ன ஆயிற்று என்பது இதுவரை தெரியவில்லை.

தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்குள் சென்று, முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் அவரது அறையில் அமர்ந்திருக்கும் போதே, மத்திய போலீஸ் பாதுகாப்புடன் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் அறை சோதனையிடப்பட்டது. அவரது வீடும், அவரது மகன் வீடும், அலுவலகங்களும் ரெய்டு செய்யப்பட்டன. அந்த சோதனை முடிந்ததும் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராமமோகன் ராவ் வெளியேறினார்.

வருமான வரித்துறை சோதனையின் முடிவு தெரிவதற்கு முன்பே அவர் மீண்டும் பதவியிலும் அமர்த்தப்பட்டு விட்டார். இத்தனைக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் அதுவும் அவர் போன்று தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த அதிகாரிகள் வேறு யாருமே மத்திய அரசையோ அல்லது மாநில அரசையோ அவ்வளவு துணிச்சலாக என்று சொல்வதை விட அடாவடியாக கேள்வி கேட்டதில்லை.

அப்படிப்பட்டவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டு விட்டது. தங்கக்கட்டிகள் பறிமுதல், புது நோட்டுக்கள் பறிமுதல், சொத்துக் குவிப்பு என்று வந்த தகவல்களோ, நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழலோ மருத்துவமனைகளுக்கு பராமரிப்பு டெண்டர் ஊழலோ எல்லாம் மறைக்கப்பட்டு விட்டது.

தமிழக இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரண்டும் பெரும் பொறுப்பை “மணல் மாபியா” சேகர்ரெட்டி என்பவருக்கு தாரை வார்த்துக் கொடுத்தது தற்போது “தர்மயுத்தத்தில் முதல்கட்ட வெற்றி” என்று கூறும் ஓ.பன்னீர்செல்வம் என்பது ஊருக்கே தெரியும். அவர்கள் திருப்பதியில் பொன்னாடை போர்த்திக்கொண்டு நின்ற காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, தொலைந்து போகாமல் மனதில் காட்சிகளாக நின்றிருக்கின்றன.

ஆனால் சேகர்ரெட்டி மட்டும் திரும்ப திரும்ப கைது செய்யப்படுகிறார். சிறையில் அடைக்கப்படுகிறார். வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் விசாரிக்கும் செய்திகள் ஏடுகளில் வருகின்றன.

ஆனால் அந்த விசாரணையை சேகர்ரெட்டியைத் தாண்டி அடுத்த கட்டமாக உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் பக்கமோ, அல்லது ஆறு வருடங்களாக அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கப்பட்ட மணல் கொள்ளைக்கு பொதுப் பணித்துறை அமைச்சராக, முதல்-அமைச்சராக துணை நின்ற ஓ.பன்னீர்செல்வம் பக்கமோ கொண்டு செல்வதற்கு சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதா அல்லது தடுக்கப்பட்டுள்ளதா என்ற நியாயமான கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில்தான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் “பண பட்டியல்” கிடைத்ததாக வருமான வரித்துறை செய்தி வெளியானது. அ.தி.மு.க. அம்மா அணியின் அறிவிக்கப்படாத “நிதி மந்திரியாக” இருந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

89 கோடி ரூபாய்க்கும் விஜயபாஸ்கர் மட்டுமே சொந்தக்காரரா? அல்லது அ.தி.மு.க. ஆட்சியில் கான்டிராக்ட், நியமனங்கள், திட்டங்கள் என்று திட்டமிட்டு, அறிவியல் பூர்வமாக வசூல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த அ.தி.மு.க.வின் “ஊழல் நிதியின்” ஒரு பகுதியா? என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

அந்தத் திசையை நோக்கி விசாரணையும் நகர்வது போல் செய்திகள் வரவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடத்தப்பட்ட சோதனை, அதைத்தாண்டி 89 கோடிக்கு சொந்தக்காரர்கள் யார் என்ற பக்கத்தில் சென்று விடாமல் தடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் இயற்கையாக எழுந்துள்ளது.

ஆர்.கே.நகரில் கைப்பற்றப்பட்ட “வாக்காளர்களுக்கான பண விநியோக பட்டியலுக்கு” காரணமானவர்களை அமைச்சர்கள் உள்பட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வரை “எங்கள் துணை பொதுச்செயலாளர்”, “எங்கள் சின்னம்மா” என்றெல்லாம் துதிபாடி விட்டு, இன்றைக்கு “தினகரன், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்போம்” என்று கூறியிருக்கிறார்கள்.

ஒரு ஊழலை வெளியேற்றிவிட்டால், வெளியேற்ற துடிப்பவர்களின் ஊழல்கள் மறைக்கப்படும், அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்தது யார்? சுதந்திரமான வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ போன்ற அமைப்புகளை தங்களின் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்த முற்படுபவர்கள் யார்? ஊழல் பெருச்சாளிகளான அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கும் வாக்குறுதி கொடுத்திருப்பது யார் என்ற கேள்விகள் தவிர்க்க முடியாததாகின்றன.

இந்திய அரசியல் சட்டத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட, மேன்மை தங்கிய தேர்தல் ஆணையர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தையே இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க ஒரு “வாடிக்கை குற்றவாளி” பயன்படுத்த முயன்றார் என்றதும் டி.டி.வி தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது டெல்லி போலீஸ்.

“வாடிக்கை குற்றவாளி”யின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சட்டப்படி சரி என்றால், வருமான வரித்துறை கைப்பற்றிய “5.16 கோடி ரூபாய் மதிப்புள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல் வசூல் பட்டியல்” “ஆர்.கே.நகரில் கைப்பற்றப்பட்ட 89 கோடி ரூபாய்க்கான பண விநியோக பட்டியல்” அடிப்படையில் இதுவரை ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? ஏன் யாரும் கைது செய்யப்படவில்லை? “வாடிக்கை குற்றவாளி” சொல்லும் வாக்குமூலத்தை விட “வருமான வரித்துறை கைப்பற்றிய பட்டியலுக்கு” எப்.ஐ.ஆர் போடும் சக்தி அதிகம் இல்லையா? அவர்களை எது தடுக்கிறது?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தில் குறுக்கிடும் ஒரு நடவடிக்கையில் எப்.ஐ.ஆர், இன்னொரு நடவடிக்கையில் அமைதி என்பது அ.தி.மு.க.விற்குள் நடக்கும் அடிதடிகளில், கூத்துக்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.

ஆகவே அ.தி.மு.க.வில் முன்பு “பெரா” அணிக்கு ஆதரவாக இருந்துவிட்டு “ஹைவேஸ் ஊழல்” புகழ் அணியாக இருந்தவர்களும் சரி, “மணல் மாபியா சேகர்ரெட்டியின் ஓ.பி.எஸ்” அணியாக இருந்தவர்களும் சரி இருவரும் இணைந்து கரம் கோர்த்து தமிழக அரசின் கஜானாவை கடந்த ஆறு வருடங்களாக கொள்ளையடித்தவர்கள் தான். ஒவ்வொரு ஊழலையும் இவ்வாறு செய்து, தமிழகத்தை 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்க வைத்த பெரும் பாவத்தை செய்தவர்கள் தான் இவர்கள்.

இரு அணியினருமே முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நலனுக்காகவும், அவரது மரணத்தில் நியாயம் கிடைக்கவும் போராடுகிறோம், “தர்ம யுத்தம்“ நடத்துகிறோம் என்றெல்லாம் பகட்டாகப் பேசுவது பகல் வே‌ஷம். தமிழக மக்களை இன்னும் ஏமாற்றி மாநிலத்தை மேலும் சுரண்டி அகில இந்திய அளவில் தமிழகத்திற்கே மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்த அடுத்த கட்ட அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

ஆகவே தி.மு.க.வின் சார்பில் “ஆண்டது போதும். தமிழகம் காப்பற்றப்பட வேண்டும்“ என்று அ.தி.மு.க.வின் இரு அணிகளையுமே நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

இரு அணிகளிலும் உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும், அவர்களின் ஊழல்களுக்கு கை நீட்டி துணை போன அதிகாரிகள் மீதும், மணல் மாபியாவுடன் தொடர்புடைய அமைச்சர்கள், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் கொடுத்து தேர்தல் ஆணையத்தை நிலைகுலைய வைத்த அ.தி.மு.க. அமைச்சர்கள், முதல்-அமைச்சர் ஆகியோர் மீது இதுவரை நடைபெற்றுள்ள வருமான வரித்துறை சோதனைகள் அனைத்திலும் கண்டறியப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான மேல் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

தற்போதைக்கு அ.தி.மு.க. விற்குள் குழப்பம் ஏற்படுத்தினால் மட்டும் போதும், அவர்களின் ஊழல் பற்றியோ தமிழக நலன் பற்றியோ நமக்கு என்ன கவலை, அ.தி.மு.க.வின் ஊழல் ஆட்சி ஏதாவது ஒரு வடிவத்தில் இன்னும் நீடித்து தமிழகத்தின் எதிர்காலம் பாழாகட்டும் என்று நினைத்து; ஒட்டுமொத்த அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல்களை கூண்டோடு வெளிச்சத்திற்கு கொண்டு வரும் புனிதப் பணியில் வருமான வரித் துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு உறுதுணையாக நிற்க வேண்டும்.இவ்வாறு மு.க.ஸ்டாலி கூறியுள்ளார்.