“சென்னை மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் முடிக்க வேண்டும்” என்று பல்வேறு துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகரில் ஆண்டுதோறும் மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 20 இடங்களுக்கு மேல் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பல இடங்களில் மழைநீர் வடிகால் பாதைகள் அடைபட்டுள்ளன. இதனால் வெள்ள பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்த நிலையில், மாற்று பணிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட துறைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையில் நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகிய துறைகள் சார்பில் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகள் மற்றும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்.