வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் கடத்தல்

26 0
வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை கடத்தல்காரர் ஒருவர் கடத்தி, காட்டுக்குள் கொண்டு சென்றதையடுத்து, சிறுவனை மீட்டு, கடத்திய நபரை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று  சனிக்கிழமை (17) அதிகாலை மட்டக்களப்பு  வாகரை பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதனால் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதாகவும் கைதான நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் தாய், தந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிறுவன் பால் கேட்க, சிறுவனின் தாயார் தந்தைக்கு பக்கத்தில் சிறுவனை விட்டுவிட்டு சமையலறைக்குச் சென்றுள்ளார்.

பின்னர், பால் போத்துலுடன் திரும்பி வந்து பார்த்தபோது சிறுவனை காணாத நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு சிறுவனை தேடியுள்ளனர்.

இதன்போது சிறுவனை கடத்திக்கொண்டு நபரொருவர் காட்டுப் பகுதிக்கு செல்வதை கண்ட மக்கள் காட்டை சுற்றி தேடியுள்ளனர்.

இந்நிலையில், சிறுவனை காட்டில் விட்டுவிட்டு சந்தேக நபர் அந்த பகுதியில் ஒளிந்திருந்தபோது, அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் சிறுவனை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர் வாழைச்சேனை செம்மண் ஓடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்; போதைப்பொருளுக்கு அடிமையானவர்; ஏற்கெனவே பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையவர்; பதிவு செய்யப்பட்ட குற்றவாளிப் பட்டியலில் (ஜ.ஆர்.சி) சேர்க்கப்பட்டவர் எனவும் போதைப்பொருள் வாங்க பணத்துக்காக சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயற்சித்துள்ளதாகவும் சந்தேக நபர் தொடர்பான பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.