தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிட்டதைப் போல, தனது நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சற்று முன்னர் ஆரம்பமான பல்வேறு ஊடகங்களினது உயரதிகாரிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரங்களின்போது தான் அளித்த வாக்குறுதிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த வாக்குறுதிகளில் மாற்றம் எதுவும் இல்லை என்றும், அவை அனைத்தும் கூறியபடியே நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
இதனிடையே, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரச நிறுவனங்கள் சிலவற்றின் தலைமைப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். குறிப்பிட்ட சில நிறுவனங்களை மேலும் திறமையாகச் செயற்பட வைக்கும் நோக்கிலேயே இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.