மீதொட்டமுல்ல குப்பைகள் அனைத்தையும் 6 மாதங்களில் மீள் சுழற்சி செய்வதற்காக அப்புறப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவபிரிய தெரிவித்துள்ளார்.
குப்பை மேடு காணப்படுகின்ற இடம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என்பதனால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் மே தின தயார் நிலை குறித்து தௌிவூட்டும் வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இந்த ஆண்டிற்கு நடாத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாகவும் மேல் மாகாண முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றும் எனவும், அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடாத்த தமது கட்சி தயார் எனவும் இசுறு தேவபிரிய கூறியுள்ளார்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று மாகாண சபைகளில் கால எல்லை நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் ஜனாதிபதியினால் கலைக்கப்படவுள்ள மாகாண சபைகள் மற்றும் கால எல்லை நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றுக்கான தேர்தலை நடாத்தும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உள்ளதாக முதலமைச்சர் இசுறு தேவபிரிய குறிப்பிட்டுள்ளார்.