அனைவரையும் உள்ளடக்கிய பொறுப்புக்கூறத்தக்க செயன்முறையே மறுசீரமைப்புக்களின் மையப்புள்ளி

22 0

அனைவரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக்கூடியதுமான செயன்முறையின் ஊடாக நாட்டுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே மறுசீரமைப்புக்களின் மையப்புள்ளியாக அமையவேண்டும் எனவும், நாடு மீண்டும் நெருக்கடிக்குள் சிக்குவதைத் தடுப்பதற்கு ஆட்சி நிர்வாக சவால்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சி நிர்வாகம் சார்ந்து இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் சவால்கள் எவையென எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அசூஸா குபோட்டா மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,

நாட்டின் ஆட்சி நிர்வாகம் என நோக்குகையில் நாட்டுமக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய சமூகக்கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதற்கும், மீளக்கட்டியெழுப்புவதற்கும் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

கொவிட் – 19 பெருந்தொற்றின் பின்னர் உலகளாவிய ரீதியில் மக்களுக்கும் அரச கட்டமைப்புக்களும் இடையிலான அவநம்பிக்கை படிப்படியாக வலுவடைந்துவிட்டது. இலங்கையிலும் கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவலை அடுத்து தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியின் பின்னர் இவ்வாறான போக்கை அவதானிக்கமுடிகின்றது.

உலகளாவிய ரீதியில் மிகவும் சவாலான பிரச்சினையாக மாறிவரும் காலநிலை மாற்ற சவாலுக்கு உரியவாறான நிலையான தீர்வை வழங்குமாறு மக்கள் அவர்களது தலைவர்களிடம் கோருகின்றனர்.

2024 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் தொடர்பில் மக்கள் அளித்த வாக்குகளின் பெறுபேறுகள் அண்மையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டன. அதற்கமைய இலங்கையில் 97 சதவீதமானோர் காலநிலை மாற்ற சவாலைக் கையாள்வதற்குரிய கடப்பாட்டை அரசாங்கம் மேலும் வலுப்படுத்தவேண்டும் எனக் கருதுகின்றனர்.

அனைவரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக்கூடியதுமான செயன்முறையின் ஊடாக நாட்டுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே மறுசீரமைப்புக்களின் மையப்புள்ளியாக அமையவேண்டும்.

நிதியியல் கொள்கைத்தீர்மானங்கள் வரிவருமான வீழ்ச்சிக்கும், மிக உயர்வான பொதுத்துறை செலவினங்களுக்கும், ஏற்றுமதிகளின் சுருக்கத்துக்கும், கடன் ஸ்திரத்தன்மை சீர்குலைவுக்கும் வழிவகுத்ததுடன், நாட்டை பாரிய பின்னடைவுக்குள் தள்ளியது.

எனவே நாடு அந்நெருக்கடிக்குள் மீண்டும் சிக்குவதைத் தடுப்பதற்கு ஆட்சி நிர்வாகத்துடன் தொடர்புடைய சில சவால்களில் அவதானம் செலுத்தப்படவேண்டும். அதேபோன்று வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.