சட்டமா அதிபருக்கு அப்பால் சுயாதீன சட்டவாதியை நியமிப்பது ஆட்சி நிர்வாகப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு உதவும்

41 0

பொறுப்புக்கூறல் சார்ந்த செயற்பாடுகளை அரசாங்கத்தின் ஓரங்கமாகவுள்ள சட்டமா அதிபரிடம் கையளிப்பதைவிட, சுயாதீன சட்டவாதி ஒருவரை நியமிப்பதானது ஆட்சி நிர்வாகத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் மிகமுக்கிய நகர்வாக அமையும் என மனித உரிகைள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய பிரதிப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பில் உள்நாட்டு சஞ்சிகையொன்றின் கட்டுரையில் மீனாக்ஷி கங்குலி மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் இராணுவத்தினரால் இழைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் குறித்து அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதை முன்னிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தொடர்ச்சியாகக் காலந்தாழ்த்தி வந்திருக்கிறது.

நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். இவ்வாறு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் நிலவிய குறைபாடு ஆட்சி நிர்வாகத்தின் சகல பகுதிகளுக்கும் வியாபித்தது.  வன்முறைப்போக்கு, ஊழல் மோசடிகள் மற்றும் நிர்வாகத்திறனின்மை என்பன அரச வருமானத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், தீவிர பொருளாதார நெருக்கடிக்கும் தோற்றுவாயாக அமைந்தது.

மனித உரிமை மீறல் சம்பவங்களில் அரசியல்வாதிகளோ அல்லது பாதுகாப்புத்தரப்பினரோ தொடர்புபட்டிருப்பதாகக் கண்டறியப்படும் வேளையில், அதுகுறித்த சுயாதீன விசாரணைகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே நாட்டின் நீதித்துறையில் நிலவும் அரசியல் தலையீடுகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொறுப்புக்கூறல் சார்ந்த செயற்பாடுகளை அரசாங்கத்தின் ஓரங்கமாகவுள்ள சட்டமா அதிபரிடம் கையளிப்பதைவிட, சுயாதீன சட்டவாதி ஒருவரை நியமிப்பதானது ஆட்சி நிர்வாகத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் மிகமுக்கிய நகர்வாக அமையும்.

அதேபோன்று அரசியல்வாதிகள் எதேச்சதிகாரிகளாக மாறுகையில், அவர்கள் தமது ஊழல் மோசடிகள் மற்றும் குற்றங்களை மறைத்து, தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏதுவாக ஏனைய கட்டமைப்புக்களை ‘வளைத்து’ விடுவார்கள். எனவே முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாத்து வலுப்படுத்துவதற்கு, அதற்குரிய அரசியல் தன்முனைப்பு இன்றியமையாததாகும். குறிப்பாக அண்மையில் கொண்டுவரப்பட்ட ஊழல் எதிர்ப்புச்சட்டம் எழுத்துவடிவில் மிகச்சிறந்ததாக இருப்பினும், உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அதனை உரியவாறு நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமாகும்.

மேலும் அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு சிவில் சமூகங்கள் முயற்சித்த மிகநீண்ட வரலாறு இலங்கைக்கு உண்டு. அவ்வாறிருக்கையில் தற்போது அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமூலம் சிவில் சமூகங்களின் நிலைத்திருப்புக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும், ஆர்ப்பாட்டங்களையும் ஒடுக்குவதற்குப் பதிலாக, நாட்டுமக்கள் அனைவரினதும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.