ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் எழுந்துள்ள பிளவை தொடர்ந்து நாமல் ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சியினருக்கான ஆசனங்களில் அமர்வது குறித்து ஆராய்ந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவில் உள்ள பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்துள்ளனர்.
எனினும் மகிந்த ராஜபக்ச இதனை நிராகரித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரிசையிலேயே அமர்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியை பிளவுபடுத்திய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எவ்வாறு ஒன்றாக அமர்வது என நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான பெரமுன நாடளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.