தமிழ் பொதுவேட்பாளர் நியமனத்தால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படுகின்றனர் !

16 0

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவதானது தமிழர்களை அந்நியப்படுத்தும் ஒரு செயற்பாடு என்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.

தமிழ் பொதுவேட்பாளர் சம்பந்தமாக தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் என்பது முழு இலங்கைக்குமானதாகும். அதில் தமிழ் மக்கள் பங்காளிகளாக இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயக ரீதியான மரபாகும். ஆனால், தற்போது தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த முயற்சியானது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும்.

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் ஊடாக தமிழ் மக்கள் தமது ஆட்சியின் தலைமையை தெரிவு செய்யும் வாய்ப்பினை பெறமுடியாதவர்களாக உள்ளனர். இது அவர்களின் எதிர்காலத்துடன் சம்பந்தப்பட்ட விடயமாகும்.

என்னைப் பொறுத்தவரையில், தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது அந்த மக்களின் இறைமையாக இருந்தாலும் அந்த விடயம் தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டியது அமைய வேண்டும்.

தற்போதைய நிலையில் தென்னிலங்கையில் மூன்றுக்கும் அதிகமான போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில் தேசிய கட்சியுடன் பேரம்பேசல்களை செய்வதன் ஊடாகவே தங்களது உரிமைகளை நோக்கி நகரலாம் என்றார்.